வீட்டிற்குப் போ!




 
பிரம்மதத்தன் காசியை ஆண்ட காலத்தில் அங்கு சேனகர் என்ற மாபெரும் யோகியாக போதிசத்வர் அவதரித்திருந்தார். அதே சமயம் அந்நகரை அடுத்து இருந்த ஒரு கிராமத்தில் பிச்சை எடுத்துப் பிழைக்கும் ஒரு பிராமணன் இருந்தான்.
 
ஒருநாள் அவன் ஏதோ ஒரு ஊரில் பிச்சை வாங்கிக் கொண்டு காட்டு வழியே தன் ஊருக்குத் திரும்பி வந்து கொண்டிருந்தான். அப்போது ஒரு அசŽர வாக்கு "பிராமணா! நீ இன்று வீட்டிற்குப் போகாமல் இருந்தால் இறந்து விடுவாய். நீ வீட்டிற்குப் போனாலோ உன் மனைவி இறப்பாள்" என்று கூறியது.
 
பிராமணன் சுற்றிலும் பார்த்து யாருமே இல்லாதது கண்டு தன்னை எச்சரித்தவன் யாராவது யட்சனோ கந்தர்வனோ அல்லது பிசாசோ என்று சந்தேகப் பட்டான். அவன் மனத்தில் பயம் ஏற்படவே எப்படியாவது சட்டென வீட்டிற்குப் போய் விட வேண்டும் என்று அவன் துடித்தான். ஆனால் வீட்டிற்குப் போனால் அவன் மனைவி இறந்து விடுவாளாமே. இந்த இக்கட்டான நிலையில் என்ன செய்வது என்று தெரியாமல் அவன் தவித்தான்.
 
 அவன் நகருக்குள் நுழைந்து ஒரு வீதி வழியாகப் போன போது சேனகரான போதிசத்வர் மக்களுக்கு தர்மோபதேசம் செய்து கொண்டுஇருப்பதைக் கண்டான். அவர் உயர்ந்த ஆசனத்தில் அமர்ந்திருக்க மக்கள் அவரைச் சுற்றிலும் கூடி இருந்தார்கள்.
 
இந்தப் பிராமணனும் கூட்ட த்தில் சேர்ந்து கொண்டு போதிசத்வர் கூறியதைக்   கேட்கலானான். போதிசத்வர் தம் பேச்சை முடித்ததும் மக்கள் கூட்டம் கலைந்து சென்றது.
ஆனால் அந்த பிராமணன் மட்டும் ஆடாமல் அசையாமல் மரம் போல நின்றான்.
 
அவனுக்குக் காட்டில் கேட்ட அசŽர வாக்கு மிகுந்த குழப்பத்தைத்தான் உண்டாக்கி இருந்தது. எப்படிப் பார்த்தாலும் கணவன் மனைவி இருவருள் யாராவது ஒருவர் இறந்தாக வேண்டும். இருவரும் இறக்காமல் இருக்க என்ன வழி என்று காணத்தான் அவன் துடித்தான்.
 
அவனைக் கண்ட போதிசத்வர் தன்னருகே வரும்படி அவனுக்குச் சைகை செய்தார். பிராமணனும் அவரருகே போய் அவரை வணங்கி எழுந்து தலை குனிந்து நின்றான். போதிசத்வரும் "நீ எதற்காக இப்போது வேதனைப் படுகிறாய்?" என்று கேட்டார். பிராமணனும் காட்டில் தன்னை யாரோ எச்சரித்ததைக் கூறி "இப்போது நான் என்ன செய்வேன்? வீட்டிற்குப் போனாலே என் மனைவி இறந்து விடுவாளாம். போகா விட்டாலோ நான் இறந்து விடுவேனாம். இருவரும் இறக்காமல் இருக்க ஏதாவது வழி கூறுங்கள்" என வேண்டினான். அப்போது போதிசத்வர் "நீ அந்த எச்சரிக்கையைக் கேட்கும் முன் என்ன செய்து கொண்டிருந்தாய்?" என்று கேட்டார். "நான் ஒரிடத்தில் உட்கார்ந்து பையிலிருந்த உணவை எடுத்துச் சாப்பிட்டேன்" என்றான்.
 
"சரி. உன்னிடம் உணவு உள்ள பை இருக்கிறது. ஆனால் நீர் குடிக்கப் பாத்திரம் எதுவும் இல்லையே. தண்ணீர் எப்படிக் குடித்தாய்?" என்று போதிசத்வர் கேட்டார். "எதிரே ஒரு ஆறு இருந்தது. அங்கு போய்த் தண்ணீர் குடித்து விட்டு வந்தேன்" என்றான் பிராமணன். "அப்படியானால் நீ உணவு சாப்பிட்டு விட்டு பையை அதே இடத்தில் விட்டு விட்டு ஆற்றிற்கு போனாய். அந்த பையில் உணவு மீதமாகி இருந்ததா?" என்று போதிசத்வர் அவனைப் பார்த்துக் கேட்டார்.
 
அவனும் "ஆமாம். பையில் இருந்ததில் பாதியை நான் உண்டேன். மிகுந்ததை கட்டி எடுத்துக் கொண்டு போய் மனைவியிடம் கொடுக்கப் போகிறேன். இதோ அந்தப் பை" என்று காட்டினான். "நீ நதிக்குப் போன போது பையின் வாயைக் கட்டவில்லையே" என போதிசத்வர் கேட்டார். "கட்டவில்லைதான்" எனப் பிராமணன் பதிலளித்தான். 
"அப்படியானால் நதியிலிருந்து திரும்பி வந்துதான் பையின் வாயைக் கட்டினாய். கட்டு முன் அதற்குள் என்ன இருக்கிறது என்று பார்த்தாயா?" என்று அவர் கேட்டார். அவனும் "பார்க்கவில்லை. அப்படியே கட்டி எடுத்து வந்தேன். இதற்குப் பிறகுதான் என்னை எச்சரிக்கும் குரல் என் காதில் விழுந்தது" என்றான்.
 
போதிசத்வரும் "அப்படியானால் நீ ஆற்றில் போய்த் தண்ணீர் குடித்த போது பை இருந்த இடத்தில் ஏதோ நடத்திருக்கிறது. அநேகமாக ஒரு பாம்பு உன் பைக்குள் போயிருக்கிறது என்றே நான் நினைக்கிறேன். அதை கவனித்த யட்சனோ தேவதையோ உன்னை எச்சரித்தது. நீ வீட்டிற்குப் போகாவிட்டால் மறுபடியும் பசிக்கும் போது பையைத் திறப்பாய். அப்போது அதிலிருக்கும் பாம்பு உன்னைத் தீண்டி விடும். நீயும் இறந்து போவாய். நீ பையைத் திறக்காமல் வீட்டிற்குப் போனால் முதலில் பையை உன் மனைவியிடம் தான் கொடுப்பாய். அவளும் அதை ஆவலுடன் திறப்பாள். அப்போது பாம்பு அவளைக் கடிக்க அவள் இறந்து விடுவாள். இது தான் விஷயம்" எனக் கூறி அப்பையைத் தான் உட்கார்ந்திருக்கும் இடத்தருகே வைக்கும்படி அந்த பிராம்மணனிடம் சொன்னார்.
 
பிராம்மணன் அப்போதுதான் தன் பைக்குள் பாம்பு புகுந்திருக்கிறது என அறிந்து திடுக்கிட்டான். போதிசத்வர் கூறியபடியே உடனேயே அவர் பக்கத்தில் வைத்து போதிசத்வர் என்ன செய்கிறார் எனப் பார்க்கலானான்.
 
அப்போது அவ்வழியே சென்ற ஒரு பாம்பாட்டியை அவர் கூப்பிட்டு பையிலுள்ள பாம்பைப் பிடிக்கச் சொன்னார். அவனும் பையின் வாயை அவிழ்த்து சீறி வந்த நல்ல பாம்பைப் பிடித்து கொண்டு போய் விட்டான்.
 
அதன் பிறகு போதிசத்வர் பிராமணனிடம் "நீ இனிமேல் பயமில்லாமல் உன் வீட்டிற்குப் போகலாம்" என்றார். பிராமணன் அவருக்குத் தன் நன்றியறிதலைத் தெரிவித்து, கவலையை விடுத்துத் தன் வீட்டிற்குச் சென்றான்.
 

குருவை மதிக்காவிட்டால்...



பிரம்மதத்தன் காசியை ஆண்ட போது போதிசத்வர் செருப்புத் தைக்கும் குடும்பத்தில் ஒரு சிறு கிராமத்தில் அவதரித்தார். அவர் பெரியவராகித் தன் குலத்தொழிலைச் செய்து ஒரு சித்த யோகியை அணுகி அவரிடமிருந்து ஒரு அபூர்வ மந்திரத்தைக் கற்றுக் கொண்டார்.

அந்த மந்திரத்தைக் கொண்டு காய் காய்க்காத காலத்தில் கூட மாமரங்களில் மாம்பழங்களை வர வழைத்து அவற்றை விற்று வாழ்ந்து வந்தார். தினமும் காட்டிற்குப் போய் ஒரு மாமரத்தின் அருகே நின்று மந்திரம் ஓதியவாறே அவர் அதன் மீது நீரைத் தெளிக்க, அம்மரம் பழங்களாகக் கீழே உதிர்த்து விழச் செய்யும். இவ்வாறு போதிசத்வர் செய்வதை ஒருநாள் சுநிந்தன் என்ற அந்தண வாலிபன் பார்த்து விட்டான்.

அவன் எந்த வேலையும் செய்யாமல் தனக்குப் பணம் வந்து குவிந்து விட வேண்டும் என்று பகல் கனவு காண்பவன். அவன் போதிசத்வர் செய்த அற்புதத்தைக் கண்டதும் அவரிடம் இருந்து அந்த அபூர்வ மந்திரத்தைக் கற்றுக் கொண்டு விடுவது என அவன் தீர்மானித்து, அப்போது முதல் போதிசத்வருக்குப் பணிவிடைகள் செய்யலானான். கீழே விழுந்த பழங்களை எடுத்து மூட்டையாகக் கட்டி சுமந்து கொண்டு அவர் பின் நடந்து அவர் வீட்டில் கொண்டு போய் இறக்கினான். அவருடைய வீட்டு வேலைகளை விழுந்து விழுந்து செய்தான்.
 


 இதைக் கண்ட போதிசத்வர் தன் மனைவியிடம் “இவன் ஏன் இப்படி நமக்கு வேலை செய்கிறான் தெரியுமா? என்னிடமிருந்து அபூர்வ மந்திரத்தைக் கற்றுக் கொள்ளத் தான். இவன் அதனைக் கற்றுக் கொண்டாலும் வெகு சீக்கிரமே அதன் சக்தி இவனிடம் இல்லாமல் போய் விடும்” என்றார். அவரது மனைவி, “பாவம்! எப்படி மாடு போல நம் வீட்டில் உழைக்கிறான்! நீங்கள் அவனுக்கு மந்திரத்தை உபதேசித்து விடுங்கள். பலிப்பதும் பலிக்காததும் அவனவன் தலை எழுத்தைப் பொறுத்தது” என்றாள்.

போதிசத்வரும் தம் மனைவியின் வற்புறுத்தலின் பேரில் சுநிந்தனுக்கு அந்த அபூர்வ மந்திரத்தை உபதேசித்து “நீ இதனை யாரிடமிருந்து கற்றாய் என்ற ரகசியத்தை வெளியிடக் கூடாது. அப்படி வெளியிட்டால் மறுவினாடியே உனக்கு இந்த மந்திரம் பலிக்காது” என்றார்.

சுநிந்தனும் யாரிடமும் அந்த ரகசியத்தைக் கூறுவதில்லை என உறுதிமொழி அளித்து போதிசத்வரிடம் விடைபெற்றுக் கொண்டு சென்றான். அவன் தினமும் நிறைய மாம்பழங்களை மரங்களில் தான் உபதேசம் பெற்ற மந்திரத்தின் சக்தியால் வரவழைத்து அவற்றை விற்று, நிறைய பணம் அடைந்து வரலானான்.

இவ்வாறு சுநிந்தன் வரவழைத்து விற்ற மாம்பழங்களில் ஒன்று காசி மன்னனுக்குக் கிடைத்தது. அவன் மாம்பழக் காலமில்லாத காலத்தில் மிகப் பெரிய ருசியான மாம்பழம் கிடைத்தது கண்டு ஆச்சரியப்பட்டான். அத்தகைய பழம் எங்கே கிடைத்தது என விசாரிக்கலானான். சுநிந்தன் தான் அதனை விற்றவன் என்பதை அவன் தன் ஆட்களிடம்இருந்து தெரிந்து கொண்டான்.
அவன் உடனே சுநிந்தனை அழைத்து விசாரிக்கவே சுநிந்தனும் “என்னிடம் அபூர்வ மந்திரசக்தி உள்ளது. அதனால் இத்தகைய பழங்களை வரவழைக்கிறேன்” என்று ஜம்பம் அடித்துக் கூறினான். அரசனும் அந்த சக்தியைக் காண விரும்பவே சுநிந்தனும் பலர் முன்னிலையில் அரசனின் தோட்டத்திலுள்ள ஒரு மாமரத்தின் முன்போய் நின்று அதன் மீது நீரைத் தெளித்து மந்திரத்தை உச்சரித்தான். மறு வினாடியே அம்மரத்தில் மாம்பழங்கள் தோன்றி கீழே விழுந்தன.



இந்த அதிசயத்தைக் கண்டு காசி மன்னன் ஆச்சரியப்பட்டு “ஆகா! இந்த அற்புத மந்திரத்தை உனக்கு உபதேசித்த மகான் யார்? உடனே சொல்” என்று கேட்டான்.சுநிந்தன் முதலில் தான் அதனைக் கற்றது போதிசத்வரிடமிருந்து எனச் சொல்ல வேண்டாம் என நினைத்தான். ஆனால் அரசன் மீண்டும் மீண்டும் கேட்கவே, சுநிந்தனும் போதிசத்வர் எச்சரித்ததையும் பொருட்படுத்தாமல் தான் அந்த மந்திரத்தைக் கற்றது செருப்பு தைக்கும் குலத்தில் பிறந்த போதிசத்வரிடமிருந்து என்று கூறி விட்டான்.

இவ்வளவு சிரமப்பட்டு கற்ற மந்திரத்தின் சக்தி திடீரென்று தன்னை விட்டு விட்டுப் போய் விடவா போகிறது என அவன் எண்ணித் தன் குருவின் கட்டளையையும் மீறி ரகசியத்தை வெளியிட்டு விட்டான். காசி மன்னன் ஆச்சரியப்பட்டவாறே “அடேயப்பா! தாழ்குலத்தில் பிறந்த ஒருவனுக்கா இவ்வளவு சக்தி! பிராமணனாகிய நீ அவனிடம் உபதேசம் பெற்றது பற்றிக் கொஞ்சம் கூட வெட்கப்படவில்லையா?” என்று கேட்டான். சுநிந்தனும் பதில் எதுவும் கூறாமல் தலைகுனிந்தவாறே அங்கிருந்து சென்றான்.

ஓரிரண்டு மாதங்களாயின காசி மன்னனுக்கு மாம்பழம் சாப்பிட வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. உடனே அவன் சுநிந்தனை அழைத்து வரச் சொன்னான். சுநிந்தன் வந்ததும் காசி மன்னன் அவனிடம் மந்திரத்தை உச்சரித்து முன் செய்தது போல இப்போதும் தனக்கு மாம்பழங்கள் வரவழைத்துக் கொடுக்கும்படிக் கூறினான். சுநிந்தனும் மிகவும் கர்வத்தோடு முன் போல அரசனின் தோட்டத்திற்குப் போனான். அவனோடு காசி மன்னனும் மற்றும் பலரும் சென்றார்கள்.

சுநிந்தனும் ஒரு மாமரத்தின் முன் நின்று அதன் மீது நீரைத் தெளித்து, மந்திரத்தை உச்சரிக்க முயன்றான். ஆனால் அவனுக்கு மந்திரமே ஞாபகத்திற்கு வரவில்லை. காசி மன்னனும் மற்றவர்களும் அது கண்டு ஆச்சரியப்பட்டனர்.

அப்போது சுநிந்தன் “நான் என் குருவின் கட்டளையை மீறினேன். நான் யாரிடமிருந்து இந்த மந்திரத்தைக் கற்றேன் என்ற ரகசியத்தைக் காசி மன்னனிடம் கூறினேன். அதனால் எனக்கு அப்போது முதல் மந்திரம் பலிக்காது போயிற்று” என்று எல்லாரிடமும் கூறி விட்டு தலைகுனிந்தவாறே தன் வீட்டிற்குச் சென்றான். குருவை மதிக்காததாலும், கர்வம் கொண்டதாலும் ஏற்பட்ட விளைவை எண்ணி, அவன் வாழ்நாள் முழுதும் வருந்தினான்.

கோட்டை நாய்கள்



 
பிரம்மதத்தன் காசியை ஆண்ட காலத்தில் போதிசத்வர் ஒரு நாயாகப் பிறந்து நாய்களின் கூட்டத்திற்குத் தலைவராக விளங்கினார். ஒரு நாள் அந்நாட்டு மன்னன் தன் ரதத்தில் எங்கோ போய் விட்டு அரண்மனைக்கு வந்தான். தன் ரதத்தை நிறுத்தி விட்டு அவன் உள்ளே சென்றான். அப்போது கோட்டைக்குள் வளர்க்கப்படும் நாய்கள் ஓடி வந்து குதிரைகளுக்குப் போடப்பட்டிருந்த கடிவாளங்களைக் கடித்து தோல் துண்டுகளைத் தின்று விட்டு ஓடிப் போய் விட்டன.

சற்று நேரத்திற்கெல்லாம் வெளியே வந்த மன்னன் தன் குதிரையின் கடிவாளங்கள் கடிக்கப் பட்டிருப்பதையும் சற்று தூரத்தில் சில நாய்கள் ஓடிக் கொண்டிருப்பதையும் கண்டான். தன் விலையுயர்ந்த கடிவாளங்கள் நாசமாக்கப்பட்டது கண்டு அவன் கோபம் கொண்டு நாட்டிலுள்ள நாய்களை எல்லாம் அடித்துக் கொல்லும்படித் தன் வீரர்களுக்குக் கட்டளை இட்டான்.

வீரர்களும் நாட்டில் தெருவில் கண்ட நாய்களை எல்லாம் அடித்துக் கொல்லலானார்கள். நாய்கள் எல்லாம் பயந்து ஓடிப் போய்த் தம் தலைவராக நாய் உருவில் இருந்த போதிசத்வரிடம் போய் அரசனின் கட்டளையைக் கூறிப் பல நாய்கள் இறந்து போனதையும் கூறின.

போதிசத்வரும் "நான் இப்போதே அரச சபைக்குப் போய் அரசனுக்கு நல்லது கூறி இந்த உத்தரவை ரத்து செய்து நியாயம் வழங்கச் சொல்கிறேன்" எனக் கூறி விட்டு அரச சபைக்குச் சென்றார். அங்கு அவர் அரண்மனைக்குள் நுழைந்து எப்படியோ தர்பார் மண்டபத்திற்குள் போனார். பிறகு அவர் அங்கு அரசன் சிம்மாசனத்தின் அடியே புகுந்து வந்து அரசனின் முன் நின்றார்.

 

அப்போது காவல் வீரர்கள் அந்த நாயை அடிக்க முயலவே அரசன் அவர்களைத் தடுத்து "இது ஏதோ சொல்ல வந்திருக்கிறது. அது என்ன என்று கேட்போம்" என்றான்.

போதிசத்வரான நாயும் "அரசே, நாட்டிலுள்ள நாய்களை எல்லாம் அடித்துக் கொல்லும்படி உத்தரவு போட்டிருக்கிறீர்களே. இது எதற்காக?" என்று கேட்டது. அரசனும் "அவை என் தேர்க் குதிரைகளின் கடிவாளங்களைத் கடித்து அந்தத் தோலைத் தின்று விட்டன. விலை உயர்ந்த கடிவாளங்கள் நாசமாகி விட்டன. இதுதான் நாய்களின் குற்றம்" என்றான்.

அப்போது போதிசத்வர் "அந்தக் கடிவாளங்களை கடித்தது எந்த நாய்கள் என்று தெரியுமா?" என்று கேட்க அரசனும் "தெரியாது" என்றான். அப்போது போதிசத்வர் 'அரசே! குற்றம் செய்தவன் யார் என்று கூடத் தெரியாமல் மொத்தமாக எல்லோரையும் தண்டிப்பது நியாயமா? உங்கள் வீரர்கள் இந்த நாட்டில் உள்ள எல்லா நாய்களையும் அடித்துக் கொல்லப் போகிறார்களா?"என்றுகேட்டார்.அரசனும் "நாட்டிலுள்ள, நாய்களை எல்லாம் கொல்லும்படி உத்தரவு போட்டேன். கோட்டைக்குள் நான் வளர்க்கும் நாய்களுக்கு இந்த உத்தரவுஇல்லை "என்றான். போதிசத்வரும் "உங்களுக்குக் குற்றம் புரிந்த நாய்கள் எவை என்பது தெரியாது. ஆனால் கோட்டைக்குள் இருக்கும் நாய்களை ஒன்றும் செய்யக் கூடாது என்கிறீர்கள். இது பாரபட்சம் காட்டுவதாகும். வெறுப்பு கொண்ட அறிவற்ற செயலாகும். ஒரு அரசனிடம் ஒருவருக்கு ஒரு நீதி மற்றொருவருக்கு இன்னொரு நீதி என்று இத்தகைய குணங்கள் இருக்கக் கூடாது," என்றார்.

அது கேட்டு அரசன் சற்று யோசித்து "அப்படியானால் என் விலையுயர்ந்த கடிவாளங்களைக் கடித்த நாய்கள் எவை என்று நீ கண்டுபிடி. அவைகளை தண்டிக்கிறேன். மற்ற நாய்களை ஒன்றும் செய்யாமல் விட்டு விடுகிறேன்" என்றான்.

போதிசத்வரும் "இந்தக் குற்றத்தை செய்தது உங்கள் கோட்டை நாய்கள். அதை நான் நிரூபித்துக் காட்டுகிறேன்" என்றார் "அப்படி செய்தால் என் உத்தரவை உடனே ரத்து செய்கிறேன்" என அரசன் கூறினான்.
உடனே போதிசத்வர் கோட்டை நாய்களைக் கொண்டு வரச் சொன்னார். அவற்றிற்கு அவர் கொட்டை முத்து போட்டு அரைத்த விழுதை மோரில் கலந்து குடிக்க வைத்தார்.

சற்று நேரத்திற்கெல்லாம் அந்த நாய்கள் வாந்தி எடுத்தன. அவை எடுத்த வாந்தியில் அவை கடித்துத் தின்று இன்னமும் ஜீரணமாகாத கடிவாளத்தோல் துண்டுகள் வெளியே வந்து விழுந்தன.

அதைக் கண்ட அரசன் ஆச்சரியப் பட்டு நிற்கவே போதிசத்வரும் "அரசே அரண்மனைப் பணியாட்கள் உங்கள் கோட்டை நாய்களுக்கு சரியான உணவு கொடுப்பதில்லை. உணவுக்காகப் பணம் வாங்கிக் கொண்டு அதில் பெரும் பகுதியை அமுக்கிக் கொண்டு விடுகிறார்கள். அதனால் பசியால் இந்தக் கோட்டை நாய்கள் வாடுகின்றன. நீங்கள் இதை சரி செய்யுங்கள்" என்றார்.அரசனுக்கு நாய் வடிவில் போதி சத்வரே வந்திருக்கிறார் என்பது தெரிந்து விட்டது. அவன் போதி சத்வர் உபதேசித்த அறிவரைகளைக் கவனமாகக் கேட்டான்.

கோட்டைக்குள் நாய்களுக்கு உணவு கொடுக்கப் பொறுப்பேற்றவர்களை விசாரித்து அவர்கள் குற்றவாளிகளே எனக் கண்டு அவர்களை வேலையிலிருந்து நீக்கிக்கடுமையாக தண்டித்தான்.

அந்த நாய்களை வளர்க்கும் பணிக்கு புதியவர்களை நியமித்தான். அவன் அவர்களிடம் "நீங்கள் இந்த நாய்களைக் கண்ணும் கருத்துமாக வளர்த்து வரவேண்டும். தெரிந்ததா?" என்றும் கூறினான்.

அது மட்டுமல்ல, நாட்டிலுள்ள நாய்களுக்கும் உணவு அளிக்க ஏற்பாடு செய்தான் அந்த அரசன். இவ்வாறு போதிசத்வரின் நற்போதனைகளால் அரசனுக்கும் மற்ற ஜீவராசிகளுக்கும் நல்வாழ்வு கிடைத்தது.
 
 

gfg

fgfg

கனவுகளின் பொருள்



 
கோசல நாட்டு மன்னனான பிம்பிசாரன் ஒரு நாளிரவு பல விசித்திர பயங்கரக் கனவுகளைக் கண்டான். மறுநாள் பல பிராம்மணர்களை அழைத்து "நீங்கள் சகல சாஸ்திரங்களைக் கற்றவர்கள். நான் கண்ட கனவுகளின் பொருள் என்ன? அதனால் ஏற்படும் பலன் என்ன?" என்று கேட்டான்.
 
பிராம்மணர்களும் மன்னன் கண்ட கனவுகளைக் கேட்டனர். இதுதான் பணம் பறிக்கத் தக்க தருணம் என அவர்கள் எண்ணினர், "அரசே! இக்கனவுகளால் உங்களுக்கும் உங்கள் வம்சத்திற்கும் உங்கள் நாட்டிற்கும் விரைவில் கஷ்டம் வரப் போகிறது. ஆனால் அதைத் தடுக்கப் பரிகாரம் செய்தால் போதும். நாட்டில் நான்கு பாதைகள் கூடும் இடங்களில் எல்லாம் யாகங்கள் நடத்தி பிராம்மணர்களுக்கு அவர்கள் மனம் குளிர தானமும் தட்சிணையும் கொடுத்தால் எல்லாம் சரியாய்ப் போய்விடும்" என்றார்கள்.
 
அதைக் கேட்ட மன்னன் "சரி. மந்திரியிடம் கூறி அதற்கான ஏற்பாடுகளைச் செய்யலாம்" என்றான். தன் பொக்கிஷ அதிகாரியிடமும் தானதர்மத்திற்காகப் பணம் தனியாக எடுத்து வைக்கவும் கட்டளையிட்டான். இது ராணிக்குத் தெரிந்தது. பிராம்மணர்களின் பேராசையைப் புரிந்து கொண்ட அவள் மன்னனிடம் "நீங்கள் இவர்கள் சொல்வதை வேதவாக்காக எடுத்துக் கொள்ளாதீர்கள்.
 
இவர்களுக்கு அரைகுறை அறிவே உள்ளது. சுயநலம் காரணமாக இப்படி தான தர்மம் செய்யச் சொல்லி அவற்றை அடைய விரும்புகிறார்கள். ஜைதவனத்தில் புத்தர்பிரான் இருக்கிறார். அவரிடம் உங்கள் கனவுகளைக் கூறி அவற்றின் பலன்கள் பற்றிக் கேளுங்கள். அவர் உங்களுக்கு 
விவரமாக எல்லாவற்றையும் கூறுவார்" என்றாள்.
பிம்பிசாரனும் "நானே நேரடியாக ஜைதவனத்திற்குப் போய் அவரை தரிசித்து நம் அரண்மனையில் பிகைஷ ஏற்க வருமாறு வேண்டுகிறேன்" எனக்கூறி ஜைதவனத்திற்குச் சென்றான். புத்தரும், மன்னனின் அழைப்பை ஏற்று அவனது அரண்மனைக்கு வந்தார்.
 
மன்னனும் அவருக்குத் தக்கபடி உபசரித்து "ஐயனே, நான் சில கனவுகளைக் கண்டேன். அவற்றின் பலன்கள் என்ன என்று சொல்ல வேண்டும்" என வேண்டினான். புத்தரும் "நீ கண்ட கனவுகளைச் சொல். அவற்றின் பலன்களைக் கூறுகிறேன்" என்றார்.
 
பிம்பிசாரனும் "முதலாவது கனவில் நான்கு காளைகள் அரண்மனையை நோக்கி ஓடி வந்தன. அவை சண்டை போடுவதைக் கண்டு களிக்கலாம் என மக்கள் நினைத்துக் கூடினர். ஆனால் அவைகள் சண்டை போடாமல் நான்கு திசைகளில் பிரிந்து சென்றன. இதன் பொருள் என்னவோ? விளக்கமாக எனக்கு கூறுங்கள்" எனக் கேட்டான்.
 
புத்தரும் "மன்னா! இது உனக்கும் தற்கால நடப்பிற்கும் சம்மந்தப்பட்டதல்ல. பிற்காலத்தில் அரசர்கள் பாவங்களைப் புரிவார்கள். அப்போது கருமேகங்கள் வந்து மழை பெய்யப் போவது போல பிரமையை ஏற்படுத்திவிட்டு பெய்யாமல் போய்விடும். அவற்றின் மீது மக்கள் கொண்ட நம்பிக்கை ஏமாற்றமாக முடியும்" என்றார்.
 
மன்னனும் "அடுத்த கனவில் மரம் செடிகள் அதிகம் உயராமல் குட்டையாகவே இருந்து மலர்ந்து காய்களைக் கொடுப்பதாகக் கண்டேன். இதன் ரகசியம் என்னவோ?" என்று கேட்டான்.
 
புத்தரும் "நான் முன்பே கூறியபடி வருங்காலத்தில் பாவங்கள் அதிகரிக்க பெண்கள் சிறுமிகளாக இருக்கையிலேயே மணம் புரிந்து கொண்டு பெரியவர்களாகுமுன்பே குழந்தைகளைப் பெற்று விடுவார்கள். இதுவே அக்கனவின் பொருள்" என்றார். "பசுமாடுகள் கன்றுகளிடமிருந்து பால் குடிப்பதாக இன்னொரு கனவையும் நான் கண்டேன்.
இதன் பொருள் என்னவோ?" என மன்னன் கூறவே புத்தரும் "கிழவர்கள் இளைஞர்களை நம்பி இருக்க வேண்டி வரும் என்பதே பொருள்" என்றார். "அடுத்து குடியானவர்கள் ஏர்களில் உள்ள முரட்டு எருதுகளை அவிழ்த்துவிட்டு அவற்றிற்குப் பதிலாகக் கன்றுக் குட்டிகளைக் கட்டுவதாகக் கனவு கண்டேன்" என மன்னன் கூறினான்.
 
புத்தரும் "நான் கூறிய பாவச் செயல் புரியும் மன்னர்கள் நல்ல மந்திரிகளைப் பதவியிலிருந்து விலக்கிவிட்டு அனுபவஞானமே இல்லாத இளைஞர்களை அப்பதவிகளில் அமர்த்துவார்கள். இதுதான் அக்கனவின் பொருள்" என்றார்.
 
"ஒருவன் கம்பளம் நேய்து கொண்டே இருக்க நேய்யாது கீழே கிடந்த பாகத்தை பெண் நரிகள் கடித்துத் தின்பதாக ஒரு கனவு கண்டேன்" என மன்னன் கூறவே புத்தரும் "வருங்காலத்தில் பாவம் அதிகரிக்கும். கணவன் சிரமப்பட்டு சம்பாதித்ததை மனைவி வீண் செலவு செய்வாள் என்பது பொருளாகும்" என்றார்.
 
"இரட்டைத் தலைக் குதிரை ஒன்று கொள்ளை தன் இருவாய்களாலும் சாப்பிடுவது போல ஒரு கனவு கண்டேன்" என மன்னன் சொல்லவே புத்தரும் "அரசாங்க வருமானத்தில் வருங்காலத்தில் அதிகாரிகள் சம்பளமும் பெற்றுக் கொண்டு லஞ்சமும் வாங்குவார்கள் என்பது இதன் பொருள்" என்றார்.
 
"அரண்மனை முன் ஒரு பெரிய குழியும் பல சிறிய குழிகள் இருப்பது போலவும் பெரிய குழியில் மட்டும் வழியவழியத் தண்ணீரை மக்கள் விடுவதையும் சிறிய குழிகளை கவனிக்காமல் இருப்பது போலவும் கனவு கண்டேன்" என்றான் மன்னன். புத்தரும் "மக்கள் சிரமப்பட்டு சம்பாதிப்பதை வருங்காலத்தில் அரசாங்க பொக்கிஷத்தில் நிரப்புவார்கள்.
 
ஆனால் மக்கள் வசதி எதுவும் பெறாமல் தம் வீடுகளில் பணம் இல்லாமல் தவிப்பார்கள்" என்றார். "ஒரு பாத்திரத்தில் சாதம் எல்லாப் பக்கத்திலும் ஒரே மாதிரி வேகாமல் ஒரு பக்கம் நன்கு வந்தும் வேறு பல பக்கங்களிலும் வேகாமல் இருப்பது போலவும் கண்டேன்" என பிம்பிசாரன் கூறினார். அதற்கு புத்தபிரான், "இது வருங்கால விவசாயம் பற்றியது.
நாட்டில் ஓரிடத்தில் நல்ல பயிர் விளைச்சலும் மற்ற பகுதிகளில் அறைகுறையான விளைச்சலுமே இருக்கும் எனக் காட்டுகிறது" என்று புத்தர் கூறினார். "மற்றொரு கனவு. அதில் நல்ல விலையுயர்ந்த சந்தனத்தைச் சிலர் தெருவில் விற்றுக் கொண்டு போவது போலக் கண்டேன்" என மன்னன் கூறவே புத்தரும்" வருங்காலத்தில் சில கயவர்கள் புனிதமான உபதேசங்களைத் தம் இஷ்டம் போலக்கூறி மிகவும் கேவலமான போக வாழ்க்கையை அடைவார்கள் என்பதே இதன் பொருள்" என்றார்.
 
"இன்னும் சில கனவுகள் பாறைகள் நீரில் மிதப்பது போலவும் அன்னப் பறவைகளின் கூட்டத்தில் காகம் சேர்ந்து நடப்பது போலவும் ஆடுகள் புலிகளை அடித்துக் கொன்று தின்பதும் அவற்றைக் கண்டு ஓநாய்கள் பயந்து நடுங்குவதும் நடப்பது போலக் கண்டேன். இவை என்ன கெடுதல்களைக் குறிக்கின்றனவோ?" என்று பிம்பிசாரன் பணிவுடன் கேட்டான்.
 
புத்தரும் "இவையெல்லாம் வருங்காலத்தில் விபŽத சம்பவங்கள் நிகழும் என்பதைக் காட்டுகின்றன. இவை உன் காலத்தில் ஏற்படாது. அது பற்றிக் கவலைப்பட வேண்டாம். வருங்காலத்தில் தர்மம் சீர்குலைந்து அதர்மம் மேலோங்க அப்போது நல்லவர்களெல்லாம் துன்பப்பட, கெட்டவர்கள் தலை நிமிர்ந்து நடப்பார்கள்.

 
நல்லவை நசிந்து தீயவை மேலோங்கி வரும். இதனைத் தான் நீ கூறியவை குறிக்கின்றன. இவை யாவும் நாட்டில் பாவம் அதிகரிக்கும் போது ஏற்படுபவை. நீ புண்ணியகாரியங்களைச் செய்து தர்மவழியில் நடந்து வருகிறாய். தொடர்ந்து இப்படியே இரு. உனக்கு எவ்வித பயமும் இல்லை உன் நாடும் சுபீட்சமாக இருக்கும்" என்றார்.
 
பிம்பிசாரனின் சந்தேகங்கள் தீர்ந்தன. அவன் மனத்தில் அநாவசியமாக பிராம்மணர்கள் தோற்றுவித்த பயம் ஒழிந்தது. எனவே அவன் யாகங்கள் செய்ய ஏற்பாடுகள் செய்வதை நிறுத்தி விட்டான். புத்தரது உபதேசங்களை ஏற்று அவரைத் தக்கபடி உபசரித்து அவரை ஜைதவனத்திற்குக் கொண்டு போய் விட்டு வந்தான்.

யானைப்பாக மன்னன்

 
பிரம்மதத்தன் காசியை ஆண்ட போது போதிசத்வர் காசியருகே ஒரு சன்னியாசியாக பிறந்திருந்தார். அவர் தினமும் பிச்சை எடுத்து வருவார். ஒரு நாள் அவர் ஒரு யானைப்பாகனின் வீட்டிற்குப் போனார். அந்த யானைப் பாகன் யானைகளைப் பிடிப்பதிலும் அக்கலையை பிறருக்கு போதிப்பதிலும் மிகவும் திறமையானவனாக இருந்தான்.
 
சன்னியாசியைக் கண்ட யானைப் பாகன் அவரை மரியாதையுடன் வரவேற்று வீட்டிற்குள் அழைத்து போய் உணவு அளித்தான். பிறகு அவன் பணிவுடன் "தாங்கள் சிறிது நாள்களாவது என் வீட்டில் தங்கி இருந்து நான் அளிக்கும் உணவை ஏற்க வேண்டும்" என்று கூறினான். போதிசத்வரும் யானைப்பாகனின் வீட்டில் ஒரு வார காலம் இருந்தார். பின்னர் அங்கிருந்து கிளம்பும்போது அவர் யானைப்பாகனுக்கு நல்லாசிகள் கூறி விட்டு சென்றார். உயர்ந்த ஸ்தானத்திற்குக் கொண்டு போயின.
 
ஒரு நாளிரவு ஒரு விறகு வெட்டி ஒரு கோயில் மண்டபத்தில் படுத்துக் கொண்டிருந்தான். அதனருகே இருந்த மரத்தின் மீது சில கோழிகள் இருந்தன. மரத்தின் கீழ் ஏதோ சத்தம் ஏற்படுவது கேட்டு மரத்தின் மீதிருந்த ஒரு கோழிக் குஞ்சு பயந்து நடுங்கிக் கீழே வேறொரு கிளையிலிருந்த கோழிக் குஞ்சின் மீது விழுந்து அதன் தூக்கத்தைக் கலைத்தது.
 
தூக்கம் கலைந்த கோழிக் குஞ்சு "அடேயப்பா! உனக்கு அவ்வளவு கர்வமா? என் பெருமை தெரியாதா? என்னைச் சாப்பிடுபவனுக்குப் புதையல் கிடைக்குமே" என்றது. அது கேட்டு அதன் மீது விழுந்த கோழிக் குஞ்சு "என்னைச் சாப்பிடுபவன் ராஜாவாகி விடுவானே" என்றது.
இரு கோழிக் குஞ்சுகள் பேசியதை மண்டபத்தில் படுத்திருந்த விறகு வெட்டி கேட்டு விட்டான். அவன் மூளை வேகமாகச் செயல் படத் தொடங்கியது. அவன் `ஆகா! எனக்குத்தான் என்ன அதிர்ஷ்டம்! இங்கே ஒரு கோழிக் குஞ்சு உள்ளது. அதனைப் பிடித்துக் கொன்று நான் சாப்பிட்டு விட்டால் இந்நாட்டின் மன்னனாகி விடுவேன். இனிமேல் கஷ்டப்பட்டு விறகு வெட்டி விற்றுப் பிழைக்க வேண்டாம்' என எண்ணினான். அவன் சற்று நேரம் கழித்து மரத்தின் மீதேறினான். எந்தக் குஞ்சு தன்னைச் சாப்பிட்டால் ஒருவன் ராஜா ஆவான் என்று கூறியதோ அதனை அவன் பிடித்துக் கொண்டு கீழே இறங்கித் தன் வீட்டிற்குப் போனான்.
 
தன் மனைவியிடம் விஷயத்தைக் கூறி அவன் அக்குஞ்சை நன்கு வாட்டி சமைத்து வைக்கச் சொன்னான். அவளும் தான் ராணியாக போவதை நினைத்து உற்சாகத்துடன் அந்தக் கோழிக் குஞ்சைக் கொன்று நன்கு வாட்டி சமைத்து ஒரு சிறு கலயத்தில் எடுத்து வைத்தாள். அப்போது விறகு வெட்டி "நாம் இருவரும் இதனை எடுத்துக் கொண்டு ஆற்றிற்குப் போவோம். நன்கு குளித்து கடவுளை வணங்கி விட்டு நிதானமாக இதைச் சாப்பிடுவோம்" என்றான். அவளும் அவன் கூறியதற்கு சம்மதித்து கலயத்தை எடுத்துக் கொண்டு ஆற்றிற்குக் கிளம்பினாள்.
 
ஆற்றின் கரையில் அக்கலயத்தை அவர்கள் வைத்து விட்டு குளத்தில் குளித்தார்கள். அப்போது திடீரென ஆற்றில் வெள்ளம் வரவே விறகு வெட்டியும் அவன் மனைவியும் உயிர் தப்ப நீந்தி எங்கோ போய் கரை சேர்ந்தார்கள். அவர்கள் வைத்திருந்த கலயம் ஆற்று வெள்ளத்தில் மிதந்தவாறே போனது. விறகு வெட்டியோ "ஐயோ! இந்த நாட்டின் மன்னனாகும் அதிருஷ்டம் எனக்கு இல்லையே" எனத் தன் மனைவியிடம் கூறிக் கண்ணீர் வடித்தான்!
 
அதே சமயம் ஆற்றில் சிறிது தூரத்தில் போதிசத்வருக்கு உணவளித்த யானைப்பாகன் ஒரு யானையை ஆற்றில் குளிப்பாட்டிக் கொண்டு இருந்தான். அவன் கண்ணில் ஆற்றில் மிதந்து வரும் கலயம் தென்பட்டது. அவன் அதனைப் பிடித்து எடுத்தான்.
 
அதில் நன்கு பக்குவப்படுத்தப் பட்ட கோழிக் குஞ்சின் மாமிசம் இருப்பது கண்டு அதனை எடுத்து உடனேயே வாயில் போட்டு மென்று தின்று விட்டான்.
 
இது நடந்த மூன்றாவது நாள் காசி மீது அண்டை நாட்டு மன்னன் படை எடுத்து வந்தான். அது கண்டு காசி மன்னன் பயந்து போனான். அவன் இயல்பாகவே ஒரு தொடை நடுங்கி. போர் என்றால் பயந்து விடுவான். ஆகையால் அண்டை நாட்டு மன்னன் திடீரெனப் படை எடுத்து வந்ததும் தான் எப்படியாவது உயிர் தப்ப வேண்டுமென நினைத்து யானைப்பாகன் போல வேடம் பூண்டு யானைப்பாகனை அரசனின் ஆடைகளை உடுத்திக் கொள்ளச் சொன்னான். பிறகு அவனை யானை மீது உட்கார வைத்துத் தான் யானைப்பாகனின் இடத்தில் அமர்ந்தான். எதிரிகள் விட்ட அம்பு குறி தவறி யானைப்பாகனாக வேடம் பூண்ட அரசனின் மீது பட அவன் இறந்து விழுந்தான்.
 
யானை மீது அமர்ந்திருந்த யானைப்பாகனோ போர்களத்தில் இருந்து ஓடாமல் வீரர்களை உற்சாகப் படுத்தி போர் புரியச் சொன்னான். போர்களம் என்றால் நடுங்கும் மன்னனா இப்படி போர் புரிகிறான் என அனைவரும் நினைத்தனர். மன்னனாக இருந்த யானைப்பாகனும் வீராவேசத்துடன் போர் புரிந்தான். எதிரிப் படை பின் வாங்கி ஓடி விட்டது. அண்டை நாட்டு மன்னன் இறந்து போனான்.
 
போர் முடிந்ததும் யானை மீது இருந்தது உண்மையில் மன்னன் அல்ல என்றும் மன்னன் வேடத்தில் யானைப்பாகன்தான் இருந்தான் என்றும் எல்லாருக்கும் தெரிந்தது. இறந்த காசி மன்னனுக்கு குழந்தைகளே இல்லை. அதனால் யாவரும் "முன்பு இருந்த அரசனே தன் ஆடைகளை இந்த யானைப் பாகனுக்குக் கொடுத்ததால் இனி நம் மன்னன் இவனே" என்றனர்.
 
மந்திரியும் புரோகிதரும் சேனாதிபதியும் மக்கள் அபிப்பிராயப் படியே யானைப்பாகனை மன்னன் ஆக்கினார்கள். அவனும் நன்கு ஆட்சி புரியலானான்.
 

 

ராட்சஸனை அறிவால் வீழ்த்திய சிறுவன்



பிரம்மதத்தன் காசியை ஆண்ட காலத்தில் போதிசத்வர் அரச குமாரனாகப் பிறந்தார். அவரது பெயர்சூட்டு விழாவின் போது பல நாடுகளிலிருந்தும் சோதிடர்களும் அறிஞர்களும் வந்திருந்தார்கள். அவர்கள் மன்னனிடம் "அரசே! இந்தச் சிறுவனின் ஜாதகம் மிகமிகச் சிறந்தது. இவன் ஐந்து வித ஆயுதங்களைக் கொண்டு உலகம் முழுவதையுமே வென்று பராக்கிரமசாலியாகத் திகழ்வான்" எனக் கூறி அக்குழந்தைக்கு பஞ்சாயுதன் என்ற பெயரையும் சூட்டினார்கள்.
சில வருடங்களாயின. அரசன் பஞ்சாயுதனைப் படிக்க வைக்க தட்சசீலத்திற்கு அனுப்பினான். அந்நாட்களில் அது
சிறந்த கல்விக் கூடமாக இருந்தது. பல பண்டித மேதைகள் அங்கு இருந்தனர். பஞ்சாயுதனும் அங்குபோய் எல்லா சாஸ்திரங்களையும் கற்றான்.

குருகுலத் தலைமை ஆசிரியர் பஞ்சாயுதனின் கல்வி முடிந்ததும் சிறப்பு மிக்க ஐந்து ஆயுதங்களை அவனுக்கு அளித்து ஆசி கூறி அனுப்பினார். பஞ்சாயுதனும் காசிக்குக் கிளம்பினான்.வழியில் அடர்ந்த காடு ஒன்றை அவன் கடந்து செல்ல வேண்டி இருந்தது. அக்காட்டில் அவனைக் கண்ட சில முனிவர்கள் "நீயோ சிறுவனாக இருக்கிறாய். இந்தக் காட்டில் ரோமாஞ்சன் என்ற பயங்கர ராட்சஸன் இருக்கிறான். அவன் கண்ணில் நீ பட்டால் உன்னைக் கொன்று தின்று விடுவான். எனவே நீ வேறு வழியில் செல்" என்று கூறினார்கள். பஞ்சாயுதனோ அதனால் சற்றும் பயப்படாமல் அதே வழியில் சென்றான். வழியில் அவன் பனைமர உயரமுள்ள ரோமாஞ்சன் என்ற ராட்சஸனைக் கண்டான். அவன் பார்க்க பயங்கரமாக பெரிய தலையுடனும் அனல் கக்கும் கண்களுடனும் இருந்தான்.

உடல் முழுவதும் கரடி போல அடர்ந்த ரோமம் வளர்ந்திருந்தது. ராட்சஸன் பஞ்சாயுதனை வழி மறித்து "யாரடா நீ! நில். எங்கே போகிறாய்? உன்னை அப்படியே விழுங்கப் போகிறேன்" என்று உரக்கக் கூவினான். பஞ்சாயுதன் சற்றும் பயப்படாமல் "அப்பா ராட்சஸனே! நீ இருப்பது தெரிந்துதான் இந்த வழியே வந்தேன். என்னை உன்னால் ஒன்றும் செய்ய முடியாது. பேசாமல் போய்விடு" என்று கூறி ஒரு அம்பை ராட்சஸன் மீது எய்தான்.
ஆனால் அந்த அம்பு ராட்சஸனை காயப்படுத்தவில்லை. அதனால் பஞ்சாயுதன் அம்புகளை அடுத்தடுத்து எய்து கொண்டே இருந்தான். அப்போதும் ராட்சஸனை அவை ஒன்றும் செய்யவில்லை. முடிவில் விஷம் தோய்ந்த அம்பை அவன் ராட்சஸன் மீது விடுத்தான். அதுவும் பயனற்றுப் போயிற்று.

 ராட்சஸன் பயங்கரமாகக் கத்தியவாறே பஞ்சாயுதன் மீது பாய்ந்தான். பஞ்சாயுதன் தன் வாளால் அவனைத் தாக்கினான். அப்போதும் அவன் அடங்கவில்லை. ராட்சஸன் பலமாகச் சிரித்து "பயலே! நீ விடாது என்னைத் தாக்க முயல்வதைப் பார்த்தால் நீ எல்லாரையும் போல அல்ல என்று நன்கு தெரிகிறது. மிகவும் பலமுள்ள என்னையே துணிந்து எதிர்த்து நிற்கிறாய். என்னைப் பார்த்தால் எல்லோரும் பயப்படுவார்களே. உனக்கு அப்படி பயமே ஏற்படவில்லையா?" என்று கேட்டான். பஞ்சாயுதனும் "பயமா? பிறந்தால் என்றாவது இறக்கத் தானே வேண்டும்? என் உடலில் அபூர்வ சக்தி வாய்ந்த வாள் உள்ளது.

அதுதான் அறிவு என்பது. என்னை நீ விழுங்க முயன்றால் அது உன்னை அழித்து விடும்" என்றான். ராட்சஸன் சற்று யோசித்து விட்டு "நீ சொல்வது உண்மையா? அப்படியானால் உன் போன்ற சக்தி வாய்ந்தவனை நான் விழுங்கினால் ஜீரணிப்பது மிகவும் கஷ்டமே. எனவே உன்னை விட்டு விடுகிறேன். நீ உன் வழியே போ" என்றான்.

பஞ்சாயுதனாக அவதரித்த போதிசத்வர் ராட்சஸனை ஆசீர்வதித்து "என்னை விட்டு விட்டாயா? ரொம்ப சரி. ஆனால் உன் விஷயம் என்ன? இப்படியே கெட்ட வழியில்தான் போய்க் கொண்டே இருக்கப் போகிறாயா? அஞ்ஞானம் என்ற இருளில் இருக்கிறாயே. நீ திருந்திவிடு. பிறரைத் துன்புறுத்தாதே நல்லறிவு பெற்று நற்செயல்களையே புரி" என்றார்.
ராட்சஸன் அவரது ஒளி மிகுந்த உருவத்தாலும், பேச்சாலும் அடங்கி ஒடுங்கிக் கை கூப்பி "ஐயா மகானுபாவரே! நான் நல்லறிவு பெற என்ன செய்ய வேண்டும்?" என்று பணிவுடன் கேட்டான்.
போதிசத்வரும் "நீ இக்காட்டு வழியே வருபவர்களைக் கொன்று தின்று பாரமாக்கிக் கொள்கிறாய். அப்படி பாவம் அதிகரிக்க அதிகரிக்க நீ இந்த மாதிரி ராட்சஸனாகத்தான் பிறந்து உழல்வாய். இதனால் உனக்கு என்றுமே நற்கதி கிட்டாது. நீ உயர்ந்த மானிடப் பிறவி அடைய வேண்டுமானால் இப்படிப் பாவச் செயல்களைப் புரியாதே" என்று அறிவுரைகளைக் கூறினார்.
அவர் கூறிய ஐந்து நெறிகளைக் கேட்ட ரோமாஞ்சனின் மனம் மாறியது. அன்று முதல் கொடிய பாவச் செயல்கள் புரிவதை விட்டு விட்டான். அது மட்டுமல்ல அவ்வழியே வரும் வழிப்போக்கர்களை உபசரித்து உணவளித்து நற்பெயர் பெற்றான். இப்படியாக பயங்கரக் கொள்ளைக்காரனாக இருந்த ரோமாஞ்சனை போதிசத்வர் தம் அறிவுரையால் நல்லவனாகத் திருத்தி விட்டார். ரோமாஞ்சனும் தன் கெட்ட செயல்களை விட்டு நல்லவனான்.